கே: எது உங்களுக்கு முதலில் தோன்றுகிறது, உங்களது கதாமனிதர்களா அல்லது கதையம்சமா?
குந்தேரா: கதையம்சம்தான், ஒரு கதாபாத்திரம் ஒரு குறிப்பிட்ட கதையம்சத்தை அறிவதற்காகவே உருவாக்கப்படுகிறது, உதாரணமாக தெரசா என்ற ஒரு கதாபாத்திரம் ஒரு நாவலில் வருகிறது. அவளுக்கு தனது உடல் அருவருப்பூட்டுவதாக உள்ளது, ஏன் இந்த உடம்பு நமக்கு இருக்கிறது. எதற்காக இது தேவைப்படுகிறது என்ற கேள்விகளை அவள்வழி முன் வைக்கப்படுகின்றன. உடலால் இருப்பது நமது முதல் வன்முறை என்று தோன்றுகிறது. தெரசா போன்றவர்களுக்கு வாழ்வின் மையமே வன்முறைதான். இதன் பிறகுதான் அவள் யாரைப்போல இருப்பாள், யாரைப்போல உடையுடுத்துவாள், போன்றவை இருக்கிறது. இது எதுவுமற்று தாமஸ் என்றொரு காதாபாத்திரம் வருகிறது.
அதற்குரிய உடல் விவரணை எதுவும் தேவையற்றதால், அவசியமற்றதாகும். அந்த கதாம்சத்தை வெளிப்படுத்தும் வடிவமே தாமஸ்.
கே: எழுத்தாளர் என்ற முறையில் உங்களைப்பற்றி எப்படி விவரிப்பீர்கள்?
குந்தேரா: அப்படி முயற்சி செய்தால், ஒன்றுமில்லை என்பதில்தான் முடியும். எல்லோர் வாழ்விலேயும் போல எனது வாழ்வும் நூற்றுக்கணக்கான காரணங்கள்
, நூற்றுக்கணக்கான கதாம்சங்கள் கொண்டது. இதில் எது முக்கியமானதென எனக்கு தெரியாது.
கே: காப்கா, மூசில், கோம்பிரோலச் மூவரையும் முக்கியமான எழுத்தாளராக மதிக்கிறீர்கள். இவர்கள் உங்களைப் பாதித்து இருக்கிறார்களா?
குந்தேரா: பாதிப்பா? இல்லை, இது வேறுவிதமானது. அவர்கள் நின்றிருக்கும் அதே அழகியல் கூரையின் கீழேதான் நானும் இருக்கிறேன். ஹெமிங்வே, புரூட்ஸ், ஜாய்சின் தாழ்வாரங்களில் அல்ல. நான் குறிப்பிட்ட மூவரும் ஒருவரையொருவர் பாதித்து கொண்ட எழுத்தாளர்கள் அல்ல. சொல்லப் போனால், அவர்களை ஒருவரையொருவர் பிடிக்காது. மூசில் பிரோலச்சை நிராகரிப்பவர், நான் இந்த மூவரையும் ஒன்று சேர்த்துப் பேசுகிறேன். அந்த ஒற்றையடிப் பாதைதான் எனது தலைக்கு மேல் உள்ள கூரை.
கே: ஐரோப்பிய நாவலை குறிப்பிடும்போது அமெரிக்க நாவல் பற்றி குறைவாக பேசுகிறீர்களே
?
குந்தேரா: எனக்கு சரியானதொரு வார்த்தை கிடைக்கவில்லை. மேற்கத்திய நாவல் பற்றி சொன்னால் ருஷ்ய நாவலை விடுபட வேண்டியிருக்கிறது. உலக நாவல் பற்றி சொன்னால், ஐரோப்பாவை மையம்கொண்ட எழுத்து என நான் நினைப்பது மறைந்துவிடுகிறது. அதனால்தான் ஐரோப்பிய நாவல் என்ற ஒரு பதத்தை பயன்படுத்துகிறேன். இது புவியியல் சார்ந்ததாக பயன்டுத்திவிடவில்லை. மாறாக நான் சொல்வது செர்வாண்டிஸிலிருந்து பாக்னர் வரை கணக்கில் கொண்ட நாவல் வகை.
கே: நாவலில் சரித்திரத்தை முதன்மைப்படுத்தும் நீங்கள் எந்த பெண் எழுத்தாளரையும் பற்றி குறிப்பிடவே இல்லை. இதை எப்படி விளக்குவீர்கள்?
குந்தேரா: புத்தகத்தின் பால்தன்மைதான் முக்கியமானதே தவிர, எழுத்தாளர் ஆணா, பெண்ணா என்பது முக்கியமில்லை. எல்லா நாவல்களும் இருபால் தன்மையானது. உலகின்ஆண் தன்மையையும் பெண்தன்மையையும் இணைந்தே விவரிக்கின்றன. எழுத்தாளர் பெண்ணாக இருப்பது அவரது குறிப்பிட்ட விஷயம்.
கே: ருஷ்ய இலக்கியங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள், அதை தொடர்ந்து வாசிக்கிறீர்களா?
குந்தேரா: எனக்கு டால்ஸ்டாயை மிகவும் பிடிக்கிறது. அவர் தஸ்தாவெஸ்கியை விடவும் மிக நவீனமானவராக இருக்கிறார். மனித சுபாவத்தின் புதிர்த் தன்மையை டால்ஸ்டாய்தான் சரியாக உணர்ந்து வெளிப்படுத்துகிறார். அடக்கமுடியாத மனஉணர்ச்சிகளை எல்லாவிதமான தடையுமற்று ஆழ்மனதிலிருந்து பீறிட செய்கிறார் டால்ஸ்டாய்.
அன்னாகாரீனாவின் மரணத்திற்கு முந்தைய பத்திகளை படித்து பாருங்கள். எதற்காக அவள் தற்கொலை செய்துகொள்ள வேண்டும். இந்த ஆசை எப்படி பிறந்தது, இதற்கு டால்ஸ்டாய் அன்னாகாரீனாவின் ஆழ்மனத்திலிருந்து நனவோடை வழியாக வெளிப்படுத்துகிறார். துண்டிக்கப்பட்ட காட்சிகளாக நகரமும் வீதிகளும் அவளது தலையினுள் தொடர்பற்று, குழம்பி நிரம்புகின்றன. முதலில் தனி மொழியை (Interior Monologue) பயன்படுத்தியவர் ஜேம்ஸ் ஜாய்ஸ் அல்ல, டால்ஸ்டாய்தான். |