பின்பு பாரீஸிற்குச் சென்று திரைக்கலையின் அடிப்படைகளை அறிந்து கொண்டு உருவாக்கிய முதல்படம் தி கப். பௌத்த மடாலயம் ஒன்றில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியினை தொலைக்காட்சியில் பார்க்க ஆசைப்படும் சிறுவனின் உலகை விவரிக்கும் இந்தத் திரைப்படம் பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறது. அப் படத்தின் வெற்றிக்குப் பிறகு நோர்பு இயக்கியுள்ள இரண்டாவது படமிது.
அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டும் என்ற கனவு எப்படி உலகம் முழுவதும் நீக்கமறப் பரவியிருக்கிறது என்பதற்கு இப்படம் ஒரு எடுத்துக்காட்டு. இமயமலையின் அடிவாரத்தில் உள்ள சிறிய கிராமம். அங்கு வேலை செய்யும் பூடான் அரசுப்பணி புரியும் இளைஞன் நீண்ட காலமாக அமெரிக்கா செல்வதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறான். முடிவில் அமெரிக்கா போக ஏற்பாடு ஆகிறது. தனது சொந்த ஊரை விட்டு அமெரிக்க செல்ல முடிவு செய்த அவன் மேற்கொள்ளும் பயணமே படம்.
பயணத்தின் நடுவில் அவன் ஒரு பௌத்த துறவியை சந்திக்கிறார். துறவி சொல்லும் கதையொன்றின் வழியே அவர்களது பயணம் ஒரே நேரத்தில் இரண்டு காலங்களில் நடப்பதாக உருமாறுகிறது.
அகிரா குரசோவாவின் ரோஷோமோன் போன்ற திரைக்கதை வடிவம் கொண்ட இப்படம் கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவத்தையும் சமகால நிகழ்வு ஒன்றையும் ஊடுகலக்கிறது. அடர்ந்த காடு. அதில் தனித்து வாழும்மரம் வெட்டி. அவனது அழகான மனைவி. எதிர்பாராமல் அவர்கள் வாழ்விற்குள் நுழையும் இளைஞன் என்ற கடந்த காலத்தின் கதை நிகழ்கால உண்மைக்கு எதிரான முன்வைக்கபடுகிறது.
படத்தின் எடிட்டிங் மற்றும் இசை மிக நன்றாக உள்ளது. பௌத்த துறவி இயக்குனராக உள்ளதால் மெல்லிய தத்துவச் சரடு படம் முழுவதும் அடிநாதமாக வெளிப்படுகிறது.
புதிய வகை ஆசிய சினிமாவில் துறவி தனக்னெ தனியிடத்தை உருவாக்கியிருக்கிறார். நாட்டார் கதை மரபும் நவீன வாழ்வும் எப்படி ஒன்று சேர முடியும் என்பதற்கு இந்த படமே சாட்சி
|