டுனிசியாவில் உள்ள இஸ்லாமியக் குடும்பத்தை சேர்ந்த சர்ன்ழ்ஹ என்ற பதிமூன்று வயது சிறுவனின் பால் இச்சைகள் அரும்பும் நாட்களின் மீது கவனம் கொள்கிறது இக்கதை. பால் இன்பம் குறித்த மதக்கட்டுபாடுகள் அதிகமான சூழலில் நௌராவிற்கு மீசை அரும்பத் துவங்கும் வயது உருவாகிறது.
நௌரா தன்னுடைய அம்மாவோடு உள்ளுரில் உள்ள பெண்களுக்கான பொதுகுளியல் கூடம் ஒன்றிற்கு தினந்தோறும் செல்கிறான். அந்தக் குளியல் கூடத்தில் வெவ்வேறு வயதில் பெண்கள் தங்களை மறந்து குளித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுவன் என்பதால் அவனைப் பெண்கள் குளியல் கூடத்திற்குள் அழைத்து செல்வதில் எவ்விதமான தடையும் இருப்பதில்லை. ஆனால் நௌராவிற்குள் இருந்த சிறுவன் மறைந்து போய் பதின்பருவத்தின் காம உணர்வுகள் துவங்கியிருப்பதால் அவன் அறைகுறை உடைகளோடும் நிர்வாணமாகவும் தென்படும் பெண் உடல்களைக் கண்களால் விழுங்குகிறான்.
வயதை மறந்து பால் இச்சைகள் அவனுக்குள் பீறிடுகின்றன. தவிப்பும் பெருமூச்சுமாக அவன் பெண் உடலை வெறித்துப் பார்த்து கொண்டிருக்கிறான். தனக்குள் ஏற்பட்ட இந்த மாறுதல்களை எவராவது கவனித்துவிடப் போகிறார்களோ என்ற பயம் அவனுக்கு ஏற்படுகிறது. அதே நேரம் மற்ற சிறுவர்களைப் போலின்றி தன்னால் பெண் உடலின் நிர்வாணத்தை நெருங்கி ரசிக்க முடிகிறது என்ற சந்தோஷமும் அவனுக்குள் உருவாகிறது.
குளியல் அறையில் மட்டுமின்றி தெருவிலும் வீடுகளிலும் அவனது கவனம் பெண்களின் மீது குவிகிறது. அது அவனைப் படுத்தி எடுக்கிறது. தன்னை விட வயதில் மூத்த பையன்களுடன் சேர்ந்து சுற்றுவதோடு பெண்களைப் பற்றி ரகசியமாக பேசவும் துவங்குகிறான்.
ஆனால் ஒரு நாளில் அவன் குளியல் அறையில் ஒரு பெண்ணின் நிர்வாணத்தை வேடிக்கை பார்ப்பதை அறிந்த குளியலறை நடத்துகின்றவள் அவனைப் பிடித்து அவமானப்படுத்தி வெளியேற்றுகிறாள். அம்மாவும் வீட்டில் இருந்த மற்றவர்களும் அவனைத் திட்டுகிறார்கள். இயல்பாக அவனுக்குள் உருவான பால் உணர்வுகள் குற்றம் என அடையாளம் காட்டப்படுகிறது.
அவனுக்குத் தன்னை சுற்றிய உலகின் மீது ஆத்திரமாகவும் எரிச்சலாகவும் வருகிறது. குளியல் அறைக்குள் அனுமதி மறுக்கபட்ட பிறகு அவனது பார்வை அவனது வயதை ஒத்த இன்னொரு இளம்பெண் மீது விழுகிறது. அவளைப் பின்தொடர்ந்து செல்லத் துவங்கி அவளது ஈர்ப்பிற்கு உள்ளாகிறான். அப்போதும் சூழலின் கெடுபிடியிலிருந்து அவனால் மீள முடியவேயில்லை.
பதின்பருவத்தில் சிறுவர்களுக்குள் ஏற்படும் பால் உணர்ச்சியின் முதல்விதைகள் இந்தப் படத்தில் மிக நுட்பமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நேற்று வரை அறிந்த உலகம் அப்படியே கலைந்து புதிய வெளியாவது அழகாக சித்தரிக்கபட்டிருக்கிறது. மறைமுகமாக ஒளித்து வைத்து எடுக்கப்பட்டதோ எனும்படியான ஒளிப்பதிவும் பெண் உடல் மீது சிறுவனின் கவனம் குவியம் போது எல்லாம் கூடவே நெருங்கிச் செல்லும் கேமிரா நகர்வுகளும் படத்திற்கு மிகச்சிறப்பாக துணை போகின்றன.
குறிப்பாக நௌராவாக நடித்துள்ள சிறுவனின் முகபாவங்களும் உடல் மொழியும் சிறப்பானவை. அவன் முதன்முதலாக இந்த படத்தில் நடித்திருக்கிறான் என்பது வியப்பூட்டுவதாக உள்ளது. கான்ஸ் உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் பங்கேற்ற படமிது.
|