என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு.  எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
 
     
 
 
 
 
புதிய பதிவுகள்
 
 
பிற  பதிவுகள்
 
வலை தள வாசிப்பிற்கு
 
சிறுகதைகள்
 
1.மூன்று குடும்பக் கதைகள்

2.எல்லா நாட்களையும் போல
 
கட்டுரைகள்
 
1. எனியோ மோரிகோன்

2. மேடம் பவாரி
 
முந்தைய பதிவுகள்
 

 Visitor Count
hit counters

 

பார்த்தவை
 
உலக சினிமாவை, உலக இயக்குனர்களை தொடர்ந்து தமிழுக்கு அறிமுகம் செய்து கொண்டிருக்கும் எஸ். ராமகிருஷ்ணன் தான் அவ்வப்போது பார்க்கும் முக்கியத் திரைப் படங்களை இந்தப் பக்கத்தில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
 

I Am Cuba.

கடந்த பத்து வருடங்களில் நான் பார்த்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று ஐ ஆம் கியூபா. கியூபப்புரட்சியை அடித்தளமாகக் கொண்டு அந்த தேசத்தின் வரலாற்றை ஒரு திரைப்படமாக்கியுள்ளார்கள். 1964ல் வெளியான இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளவர் ருஷ்ய இயக்குனரான மிகேல் கலடோஷோவ்.

சிறந்த உலகப்படங்களின் பட்டியலில் தவறாது இடம் பெற்றுள்ள இத்திரைப்படம் ஒளிப்பதிவில் உலக சாதனை செய்துள்ளது. நவீன ஒளிப்பதிவு குறித்து இந்தப் படத்திலிருந்து கற்றுக் கொள்ள நூறு விஷயங்கள் உள்ளன. தொழில்நுட்ப உபகரணங்கள் எதுவுமில்லாத 1960 களில் வியக்கத்தக்க கேமிராக் கோணங்களுடன் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது பிரமிப்பு ஊட்டக்கூடியது.

 

உதாரணத்திற்கு பல அடுக்கு கட்டிடம் ஒன்றின் உயர்தளத்தில் நடைபெறும் விழாவிலிருந்து கேமிரா அப்படியே கிழே இறங்கி ஒவ்வொரு அடுக்காக வந்து சட்டென அங்குள்ள நீச்சல் குளத்தின் உள்ளே போய்விடுகிறது. நீருக்கடியில் கேமிரா பயணம் செய்து அதிலிருந்தும் கீழ் இறங்குகிறது. துண்டிக்கபடாத நீண்ட ஒற்றைக் காட்சியாக படமாக்கபட்டுள்ளது. இதற்காக கேமிராவைச் சுற்றிலும் விசேச உறைகள் போடப்பட்டு கேமிரா நனைந்துவிடாமல் காட்சி படமாக்கபட்டிருக்கிறது.
ஐந்து பகுதிகளாகப் பிரிக்கபட்டுள்ள இப்படம் வாய்ஸ் ஒவரில் துவங்குகிறது. தேசமே தன் கதையைச் சொல்லத் துவங்குவது போன்று ஆரம்பமாகிறது. ஆரம்பக் காட்சியில் பருந்து பார்வையில் க்யூபாவின் பசுமையான நிலப்பரப்பு காட்டப்படுகிறது. தென்னை மரங்களும் கரும்புத் தோட்டங்களும் நிரம்பிய நீண்ட நிலவளம். கேரளாவை நினைவுபடுத்தும் நிலக்காட்சிகள்.

இவ்வளவு நீண்ட பருந்துப் பார்வைக் காட்சி இன்று வரை வேறு படங்கள் எதிலும் நான் கண்டதில்லை. படத்தின் சிறப்பம்சம் அதன் விசேசமான இசையமைப்பு மற்றும் கதை சொல்லும் முறை. ஐசன்ஸ்டீனின் திரைக்கலையை முழுமையாகப் பயன்படுத்தியுள்ள படம் என்று விமர்சகர்கள் கொண்டாடுவது நிஜம் என்றே தோன்றுகிறது.
படத்தின் முதல் பகுதி படீஸ்டா கிளப்பைச் சுற்றி விவரிக்கபடுகிறது. அமெரிக்க வணிக உரிமையாளர்களுக்குச் சொந்தமான இந்த இரவு விடுதியின் கேளிக்கைகள் மற்றும் உல்லாசத்திற்காக க்யூபாவின் இசைக்கலைஞர்கள் பெண்கள் எப்படி பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள் என்று நீள்கிறது. ஆப்ரிக்க தாளக்கட்டுடன் கூடிய இசையும் க்யூபாவின் மரபிசையும் கலந்த இரவுப்பாடல்களும் கறுப்பு வெள்ளையில் அசைந்து செல்லும் நிழல் உருவங்களும் இசையின் எழுச்சிக்கு ஏற்ப மாறும் கேமிராக் கோணங்களும் மிக அருமையானவை.

அடுத்த பகுதி கரும்புத் தோட்டங்களை எப்படி பன்னாட்டு நிறுவனங்கள் அபகரித்தன என்பதைப் பற்றியது. இதில் கரும்பு வெட்டிப் பிழைக்கும் விவசாயி ஒருவனின் வாழ்வு விவரிக்கபடுகிறது. தனது நிலத்தை யுனைடெட் நிறுவனம் அபகரிப்பதிலிருந்து அவன் கொள்ளும் கோபம் முடிவில் மொத்த கரும்புத் தோட்டத்தையே எரிப்பதில் போய் முடிகிறது. கரும்புத் தோட்டம் எரிக்கபடும் காட்சியில் உள்ள ஒற்றைமேகம் கொண்ட ஆகாசமும் பரந்த வெற்று வெளியும், பற்றி எரியும் நெருப்பும் உக்கிரமானவை. இதைப் பதிவு செய்வதற்காக அகசிவப்பு பிலிம் படம்படுத்தபட்டிருக்கிறது.

அதன் பிந்திய பகுதி க்யூபாவில் உருவான மாணவர் எழுச்சி மற்றும் அதைத் தொடர்ந்த மக்கள் எழுச்சியை முன்வைக்கிறது. கவித்துவமான விவரணைகள். தேர்ந்த இயக்கம். சிறந்த இசை என்று தரமான படத்திற்கான முன் உதாரணம். படத்திற்கு கூடுதல் வலிமை சேர்ப்பது ருஷ்யக் கவிஞரான யெவ்டுஷெங்கோவின் கவிதைகள். இயக்குனரோடு இணைந்து யெவ்டுஷெங்கோவும் இப்படத்தின் திரைக்கதையாசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

சினிமாவிற்கு எந்த அளவு இசையும் காட்சிபடுத்துதலும் முக்கியம் என்பதற்கான முன்உதாரணம் இப்படம்.

 

Mountain petrol

நேஷனல் ஜியாகிரபி சேனலால் உருவாக்கபட்டுள்ள இந்தத் திரைப்படம் சீனாவின் கிகிஜிலி என்ற பனிப்பிரதேசத்தில் உள்ள இயற்கைக் காப்பகத்தில் காணப்படும் அரியவகை திபெத்திய கலைமான்களை வேட்டையாடுவர்களையும் அவர்களைத் தடுத்து நிறுத்தப் போராடும் பனிகாவலர்களையும் பற்றியது.

 

கண்ணுக்கு எட்டியவரை மனிதர்களே இல்லாத நீண்ட பனிவெளி. அதில் கானல் போல அலைந்து கொண்டிருக்கும் வெளிச்சம். கானலைக் குடிப்பதற்காக அலைந்து கொண்டிருக்கும் மான்கள் என்று அறியப்படாத பனிப்பிரதேச வாழ்வு துவங்குகிறது. திபெத்திற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள பனிமலையின் உயர்ந்த பகுதி கிகிஜிலி. அங்கே திபெத்தியர்கள் வாழ்கிறார்கள்.

திபெத்தியக் குடும்பம் ஒன்றில் நடைபெறும் சாவுச்சடங்கினைப் பற்றிய புகைப்படம் எடுக்க வரும் காயூ அங்கு தோல் பொருள்களுக்காக அரிய வகை மான்கள் வேட்டையாடப்படுவதைப் பற்றி அறிந்து அதை உலகின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக, தான் அவர்களுடன் காவல்பணியை பார்வையிட வருவதாகச் சொல்கிறான்.

அன்றிரவே பனிக்காவலர்களின் படையொன்று புறப்படுகிறது. நீண்ட பயணத்தின் இறுதியில் அடிவார முகாமை அடைகிறார்கள். மான்தோல் கடத்தல் அந்தப் பகுதியில் தொடர்ந்து நடந்து வருவதால் தடுப்பு முகாம்கள் அமைக்கபட்டுள்ளன. காவல்படை வழியில் கடந்துசென்ற வாகனம் ஒன்றைச் சோதனை செய்து மான்தோல்களைக் கைப்பற்றுகிறது.

அதன்பிறகு மலையின் அதிஉயரத்திற்கு பயணம் துவங்குகிறது. நிலாவில் காலடி வைத்தது போன்ற யாருமற்ற நிலப்பரப்பு. தொலைவில் ஒளிரும் சூரியன், மனித மூச்சொலிகளைத் தவிர வேறு ஒசையற்ற நிசப்தம். கொன்று தோல் உரிக்கபட்டு வீசியெறியப்பட்ட ஆயிரக்கணக்கான மான்களின் உடல்களை ஒரு இடத்தில் பார்வையிடுகிறார்கள். மிக அரிய காட்சியது. இறந்து போன மான்களைச் சேகரித்து புதைத்துவிட்டு வேட்டையாடியவர்களை துரத்திப் பிடிப்பது என்று காவல்படை புறப்படுகிறது

படம் முழுவதும் அவர்களின் சாகசப்பயணம் விவரிக்கபடுகிறது. மான்வேட்டையாடுபவர்கள் பிடிபடுகிறார்கள். ஆனால் அவர்கள் வெறும் கூலிகள். அவர்களுக்குப் பின்னால் உள்ள வணிகர்கள் தப்பிவிடுகிறார்கள். பிடிபட்ட கைதிகளைத் தங்களோடு அழைத்துக் கொண்டு பனியில் வாகனம் செல்கிறது. வழியில் வாகனக் கோளாறு ஏற்படவே தடங்கல் உருவாகிறது. கைதிகள் தப்பிப் போகிறார்கள்.

காவலர்களால் துரத்தப்படும் கைதிகளுக்கு உதவி செய்ய வந்த கடத்தல்காரர்கள் காவலர்களைக் கொல்கிறார்கள். புகைப்படக்கலைஞரைத் தவிர மற்ற யாவரும் கொல்லப்படுகிறார்கள். இறந்து போன காவல் தலைவனின் உடல் மட்டுமே வீடு திரும்புகிறது. மான்வேட்டையை பத்து பேர் கொண்ட காவல்படையால் மட்டும் தடுத்து நிறுத்திவிட இயலாது என்ற உண்மை முகத்தில் அறைவது போன்று சொல்லப்படுகிறது.

அரிய வகை மான்களை பகட்டான தோல் பொருட்களுக்காக எப்படி வேட்டையாடிக் கொல்கிறார்கள் என்ற உண்மைச் சம்பவங்களின் மீது நகர்கிறது இப்படம். நேஷனல்
ஜியாகிரபியின் படம் என்பதை மெய்யாக்குவது போன்ற இயற்கையின் வனப்பு மிக்க காட்சிப்பதிவுகள். படத்தின் இயக்குனர் லு சுகான். இவரது முந்தைய படமான மிஸ்ஸிங் கன் மிக முக்கிய படமாகும்

படம் முடியும் போது உடம்பில் குளிர் ஏறிக் கொள்கிறது. கண்ணில் மான்கள் சுட்டு வீழ்த்தபடும் காட்சி அப்படியே உறைந்து போய்விடுகிறது. இயற்யை எந்த அளவு நாம் சீரழிக்கிறோம் என்ற துக்கம் மேலோங்குகிறது. அதுவே இப்படத்தின் வெற்றி.

 
Travellers and magicians
 

Khyentse Norbu என்ற திபெத்திய பௌத்த துறவி இயக்கியபடமிது
.
சிறுவயதிலே பௌத்த மடாலயத்தில் துறவியாகச் சேர்க்கப்பட்டு இருபது வருடங்களுக்கும் மேலாக துறவுவாழ்க்கையை மேற்கொண்ட நோர்பு பிரெஞ்சு ஆவணப்படக்குழுவினர்களுக்கு உதவி செய்வதற்காகச் சென்று திரைக்கலையின் மீது ஈடுபாடு கொண்டார்.

 

பின்பு பாரீஸிற்குச் சென்று திரைக்கலையின் அடிப்படைகளை அறிந்து கொண்டு உருவாக்கிய முதல்படம் தி கப். பௌத்த மடாலயம் ஒன்றில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியினை தொலைக்காட்சியில் பார்க்க ஆசைப்படும் சிறுவனின் உலகை விவரிக்கும் இந்தத் திரைப்படம் பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறது. அப் படத்தின் வெற்றிக்குப் பிறகு நோர்பு இயக்கியுள்ள இரண்டாவது படமிது.

அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டும் என்ற கனவு எப்படி உலகம் முழுவதும் நீக்கமறப் பரவியிருக்கிறது என்பதற்கு இப்படம் ஒரு எடுத்துக்காட்டு. இமயமலையின் அடிவாரத்தில் உள்ள சிறிய கிராமம். அங்கு வேலை செய்யும் பூடான் அரசுப்பணி புரியும் இளைஞன் நீண்ட காலமாக அமெரிக்கா செல்வதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறான். முடிவில் அமெரிக்கா போக ஏற்பாடு ஆகிறது. தனது சொந்த ஊரை விட்டு அமெரிக்க செல்ல முடிவு செய்த அவன் மேற்கொள்ளும் பயணமே படம்.
பயணத்தின் நடுவில் அவன் ஒரு பௌத்த துறவியை சந்திக்கிறார். துறவி சொல்லும் கதையொன்றின் வழியே அவர்களது பயணம் ஒரே நேரத்தில் இரண்டு காலங்களில் நடப்பதாக உருமாறுகிறது.

அகிரா குரசோவாவின் ரோஷோமோன் போன்ற திரைக்கதை வடிவம் கொண்ட இப்படம் கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவத்தையும் சமகால நிகழ்வு ஒன்றையும் ஊடுகலக்கிறது. அடர்ந்த காடு. அதில் தனித்து வாழும்மரம் வெட்டி. அவனது அழகான மனைவி. எதிர்பாராமல் அவர்கள் வாழ்விற்குள் நுழையும் இளைஞன் என்ற கடந்த காலத்தின் கதை நிகழ்கால உண்மைக்கு எதிரான முன்வைக்கபடுகிறது.

படத்தின் எடிட்டிங் மற்றும் இசை மிக நன்றாக உள்ளது. பௌத்த துறவி இயக்குனராக உள்ளதால் மெல்லிய தத்துவச் சரடு படம் முழுவதும் அடிநாதமாக வெளிப்படுகிறது.
புதிய வகை ஆசிய சினிமாவில் துறவி தனக்னெ தனியிடத்தை உருவாக்கியிருக்கிறார். நாட்டார் கதை மரபும் நவீன வாழ்வும் எப்படி ஒன்று சேர முடியும் என்பதற்கு இந்த படமே சாட்சி

 
Cyclo
 

வியட்நாமிய இயக்குனரான Tran Anh Hung இயக்கியுள்ள இந்தப் படம் சைக்ளோ எனப்படும் கைரிக்ஷாக்காரனின் உலகைப் பற்றியது. Tran Anh Hung இயக்கிய தி சென்ட் ஆப் கிரீன் பபாயா என்ற படத்தைப் பார்த்திருக்கிறேன். நேர்த்தியான படம். சமகால இயக்குனர்களில் இவரது பங்களிப்பு முக்கியமானது என்றே தோன்றுகிறது.

 

கைகளால் இழுத்து செல்லப்படும் ரிக்ஷாக்கள் இன்றும் வியட்நாமில் அதிகம் பயன்பாட்டில் உள்ளன.கல்கத்தா போன்ற மாநகரில் இன்றும் கைரிக்ஷா காணப்படுகிறது. வியட்நாமின் நகரங்களை ஆக்ரமித்துள்ள போதை மருந்துக் கடத்தல் மற்றும் குற்றஉலகம் சார்ந்த நிகழ்வுகளே இப்படத்தின் முதன்மை சரடு.

கைரிக்ஷா ஒட்டும் ஒருவன் தனது வண்டியை சாலையோரம் நிறுத்திவிட்டு இயற்கை உபாதையைப் போக்கிக் கொள்ளச் செல்கிறான். ஆனால் அவன் திரும்பி வருதவற்குள் அவனது ரிக்ஷா திருடு போய்விடுகிறது. கண் எதிரில் வண்டியைத் திருடி கொண்டு செல்பவர்களைத் துரத்துகிறான். ஆனால் அவர்கள் தப்பிப் போய்விடுகிறார்கள். வண்டியை மீட்பதற்காக சுற்றியலைகிறான்.

அது போதை மருந்து கடத்துகின்றவர்களால் திருடப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டதும் எதிர்கொள்ள வழியின்றி திகைக்கிறான். அவனுக்கு உதவி செய்ய வந்த இன்னொரு குற்றக்கும்பல் அவனை வைத்து தங்களது சொந்தப் பகையை தீர்த்து கொள்கிறார்கள். குற்றஉலகில் நுழைந்தவன் அதிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொள்கிறான். அவனோடு அவனது சகோதரியும் மாட்டிக் கொண்டு வேசையாகிறாள். தன் மேல் படிந்த கறையை போக்கிக் கொண்டு அதிலிருந்து தப்ப மேற்கொள்ளும் முயற்சிகளும் அதன் தொடர்விளைவுகளே கதையின் முடிவு.

இருபது வயதைக் கடந்த இளைஞனின் வாழ்வு எப்படி ஒரு சிறிய நிகழ்வில் திசைமாற்றம் கொள்கிறது என்பதை விவரிக்கும் இப்படம் பல்லியின் வாலை பல்லால் கடித்து துண்டிப்பது. போன்ற உச்சபட்சமான வன்முறை காட்சிகள் கொண்டது.

சமகால வியட்நாமிய படங்களை பற்றி அதிக அறிமுகம் நமக்கில்லை. இப்படத்தை பார்க்கும் போது வியட்நாமிய சினிமா அதன் தரத்தில் உலக சினிமாவோடு போட்டியிடும் தன்மைக்கு உயர்ந்திருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

 
Love in the time of cholorea
 

நோபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க நாவலாசிரியரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் நாவலின் திரைவடிமே இத்திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பிற்குள்ளான இப்படத்தின் வீடியோ பிரதியொன்றை வரவழைத்து பார்ப்பதற்கு நான்கு மாத காலப் போராட்டமானது. ஆனால் மார்க்வெஸின் எழுத்தில் இருந்த நெருக்கம் திரைப்படத்தில் இல்லை.

திரைப்படம் நாவலுக்கு பெருமளவு நெருக்கமாகவே காட்சிபடுத்தபட்டிருகிறது. மார்குவெஸின் கதைகளில் Maria my Dearest , Eréndira, Chronicle of a Death Foretold, A Very Old Man with Enormous Wings, Eyes of a Blue Dog, No One Writes to the Colonel போன்றவவை முன்னதாக ஸ்பானிய மொழியில் படமாக்கபட்டுள்ளன

 

சில வருடங்களுக்கு முன்பாக மார்க்வெஸே தனக்கு விருப்பமான ஆறு இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களின் வழியே தனது சிறந்த ஆறு சிறுகதைகளை படமாக்கியுள்ளார். அந்த வரிசைகளையும் பார்த்திருக்கிறேன்.

இந்த படம் ஹாலிவுட்டின் ரசிகர்களை முன்நிறுத்தியே உருவாக்கபட்டிருக்கிறது. மார்க்வெஸின் மகன் Rodrigo Garcia ஹாலிவுட்டில் இயக்குனராக உருவாகியிருக்கிறார். அவரது உந்துதல் தான் இப்படம் உருவாக காரணம் என்கிறார்கள். இந்த படத்தை இயக்கியிருப்பவர் Mike Newell.

நிறைவேறாத காதல் கொண்ட இருவரைப் பற்றியதே இத்திரைப்படம். பிளாரென்டினோ சிறுவயது முதலே பெர்மினாவோடு நட்பாகப் பழகுகிறான். பதின்வயதில் அது காதலாகிறது. ஆனால் பெர்மினா அதைக் கண்டு கொள்ளவேயில்லை. அவளது காதலுக்கு ஏங்கி பின்னாடியே சுற்றி அலைகிறான். ஆனால் பெர்மினா அவனை ஏற்றுக் கொள்ளவில்லை.

காலமாற்றத்தில் இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். தனது நிறைவேறாத காதலுக்காக இனிமேல் எந்தப் பெண்ணோடும் பழகக் கூடாது என்று பிடிவாதமாக இருக்கிறான் பிளாரென்டினோ. ஆனால் பெர்மினா ஒரு மருத்துரை மணம் செய்து கொண்டு குடும்பப் பெண்ணாக மாறியிருப்பதை ஒரு நாள் அறிகிறான். அவளைப் பழிவாங்க தினம் ஒரு பெண்ணோடு பழகத் துவங்குகிறாள். ஆனாலும் அவனது அடிமனதில் பெர்மினா மீது கொண்ட காதல் தீராத நோயாக வளர்ந்து கொண்டேயிருக்கிறது.

இருவருக்கும் வயதாகிறது. பெர்மினாவின் கணவரான மருத்துவர் அர்பினோ தனது நண்பரின் தற்கொலைப் பற்றி அறிந்து சாவு வீட்டிற்கு சென்றுத் திரும்பிய பிறகும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் தனது கிளியைப் பிடிக்க மரத்திலேறி விழுந்து உயிர்விடுகிறார். பெர்மினா விதவையாகிறாள். அவளுக்கு வயதானதைப் பற்றி கவலையின்றி திரும்பவும் தனது காதலை வெளிப்படுத்த பிளாரென்டினோ அவளது வாழ்விற்குள் நுழைகிறான்.